Monday, October 5, 2020

தேவ ஆவியைப் பெற்ற இந்த மனுஷனைப்போல வேறொருவன் உண்டோ

 

Kanmalai Christian Church

Word of God: Brother Micheal

Date: 04.10.2020


ஆதியாகமம் 41:38

அப்பொழுது பார்வோன் தன் ஊழியக்காரரை நோக்கி: தேவ ஆவியைப் பெற்ற இந்த மனுஷனைப்போல வேறொருவன் உண்டோ என்றான்.

தேவனுடைய ஆவியை பெற்ற மனுஷர் எப்படி இருப்பார்கள் அவர்கள் வாழ்க்கையில் காணப்படுகிறதான ஏழு விதமான காரியங்களை வேதத்தை அடிப்படையாக கொண்டு நாம் இங்கே தியானிப்போம். 

தேவ ஆவியை நாம் பெற்றிருக்கும் பொழுது

1. தேவனுடைய அன்பு நிறைந்து காணப்படுவோம் 

ஆதியாகமம் 37:3

இஸ்ரவேலின் முதிர்வயதிலே யோசேப்புத் தனக்குப் பிறந்ததினால், இஸ்ரவேல் தன் குமாரர் எல்லாரிலும் அவனை அதிகமாய் நேசித்து, அவனுக்குப் பலவருணமான அங்கியைச் செய்வித்தான்.

வசனம் சொல்கிறது அதிகமாய் நேசித்ததினாலே அபிஷேகம் பெற்ற யோசேப்பை இஸ்ரவேல் அதிகமாய் நேசித்தார். இஸ்ரவேலுக்கு கடைசியாய் பிறந்த மகன் யோசேப்பு அது போல இந்த கடைசி காலத்தில் நாம் எல்லோரும் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் பிறந்து இருக்கிறோம் எனவே ஆண்டவர் நம்மை அதிக அதிகமாய் நேசிக்கிறார். தேவ ஆவியை பெற்றவர்களை கர்த்தர் அதிக அதிகமாய் நேசிக்கிறார். 

2. வரங்களின் கிரியைகள் வெளிப்படும் 

 ஆதியாகமம் 37:19

ஒருவரை ஒருவர் நோக்கி: இதோ, சொப்பனக்காரன் வருகிறான்,

ஆதியாகமம் 37:5

யோசேப்பு ஒரு சொப்பனம் கண்டு, அதைத் தன் சகோதரருக்கு அறிவித்தான்; அதினிமித்தம் அவனை இன்னும் அதிகமாய்ப் பகைத்தார்கள்.

தேவன் நமக்கு ஒவ்வொருவருக்கும் ஆவியின் வரங்களை பகிர்ந்து அளிக்கிறார். இன்றைக்கு உன்னை பார்த்து வியந்து பேசத்தக்கதாக கர்த்தர் செய்வார். தேவனுடைய ஆவி உங்களில் நிலைத்திருந்தால் எல்லார்க்கும் முன்பதாக கர்த்தர் உங்களை வித்தாயசப்படுத்தி வைப்பார். 

3. தேவ சித்தம் நிறைவேற்றுவோம் 

ஆதியாகமம் 37:13

அப்பொழுது இஸ்ரவேல் யோசேப்பை நோக்கி: உன் சகோதரர் சீகேமிலே ஆடுகளை மேய்க்கிறார்கள் அல்லவா? உன்னை அவர்களிடத்துக்கு அனுப்பப்போகிறேன், வா என்றான். அவன்: இதோ, போகிறேன் என்றான்.

ஆதியாகமம் 37:14

அப்பொழுது அவன்: நீ போய், உன் சகோதரருடைய க்ஷேமம் எப்படி என்றும், ஆடுகள் எப்படி இருக்கிறது என்றும் பார்த்து, எனக்கு மறுசெய்தி கொண்டுவா என்று அவனுக்குச் சொல்லி, எபிரோன் பள்ளத்தாக்கிலே இருந்து அவனை அனுப்பினான்; அந்தப்படியே அவன் சீகேமுக்குப் போனான்.

நீங்கள் தேவனுடைய சித்தத்தை செய்யவே அழைக்கப்படீர்கள். தேவனுடைய சித்தத்திற்கு கீழ்ப்படிந்து நாம் வாழ வேண்டும். தேவ ஆவி ஒருவர் மேல் இருக்கும் என்று சொன்னால் அவர்கள் தேவ சித்தத்தை செய்பவர்களாக மட்டுமே இருப்பார்கள். தேவ சித்தத்தை துணிவோடு செய்வதற்கு நமக்குள் தைரியம் இருக்க வேண்டும்.  

4. திறமையான பாத்திரமாய் மாற்றுவார்

ஆதியாகமம் 39:2

கர்த்தர் யோசேப்போடே இருந்தார், அவன் காரியசித்தியுள்ளவனானான்; அவன் எகிப்தியனாகிய தன் எஜமானுடைய வீட்டிலே இருந்தான்.

தேவன் உங்களை திறமையுள்ள பாத்திரமாய் மாற்றுவார். உங்களை ஏளனமாய் பார்த்தவர்கள் முன்பதாக கர்த்தர் உங்கள் தலையை உயர்த்துவார். யோசேப்பை காரிய சித்தி உள்ளவனாய் மாற்றினார் அதுபோல உங்களை மாற்ற வல்லவராய் இருக்கிறார். 

5. அதிகாரியாய் மாற்றுவார் 

ஆதியாகமம் 41:38

அப்பொழுது பார்வோன் தன் ஊழியக்காரரை நோக்கி: தேவ ஆவியைப் பெற்ற இந்த மனுஷனைப்போல வேறொருவன் உண்டோ என்றான்.

ஆதியாகமம் 41:39

பின்பு, பார்வோன் யோசேப்பை நோக்கி: தேவன் இவையெல்லாவற்றையும் உனக்கு வெளிப்படுத்தியிருக்கிறபடியால், உன்னைப்போல விவேகமும் ஞானமுமுள்ளவன் வேறொருவனும் இல்லை.

ஆதியாகமம் 41:40

நீ என் அரமனைக்கு அதிகாரியாயிருப்பாய்; உன் வாக்கின்படியே என் ஜனங்கள் எல்லாரும் அடங்கி நடக்கக்கடவர்கள்; சிங்காசனத்தில் மாத்திரம் உன்னிலும் நான் பெரியவனாய் இருப்பேன் என்றான்.

ஆதியாகமம் 41:41

பின்னும் பார்வோன் யோசேப்பை நோக்கி: பார், எகிப்துதேசம் முழுமைக்கும் உன்னை அதிகாரியாக்கினேன் என்று சொல்லி,

ஆதியாகமம் 41:42

பார்வோன் தன் கையில் போட்டிருந்த தன் முத்திரை மோதிரத்தைக் கழற்றி, அதை யோசேப்பின் கையிலே போட்டு, மெல்லிய வஸ்திரங்களை அவனுக்கு உடுத்தி, பொன் சரப்பணியை அவன் கழுத்திலே தரித்து,

ஆதியாகமம் 41:43

தன்னுடைய இரண்டாம் இரதத்தின்மேல் அவனை ஏற்றி, தெண்டனிட்டுப் பணியுங்கள் என்று அவனுக்கு முன்பாகக் கூறுவித்து, எகிப்துதேசம் முழுமைக்கும் அவனை அதிகாரியாக்கினான்.

கர்த்தர் யோசேப்பை எகிப்து தேசம் முழுமைக்கும்  அதிகாரியாக வைத்தார். உங்களை கர்த்தர் அதிகாரியாய் மாற்றுவார். தேவனுடைய ஆவி உங்களில் இருக்கும் என்று சொன்னால் இனி வருகிற காலங்களில் நீங்கள் அதிகாரியாய் இருப்பீர்கள். உங்களிடத்தில் கர்த்தர் பல காரியங்களை ஒப்புவிப்பார். உங்களை போல வேறொரு மனுஷனை காண முடியாது. 

6. ஆசீர்வாத பாத்திரமாய் மாற்றுவார் 

ஆதியாகமம் 43:29

அவன் தன் கண்களை ஏறெடுத்து, தன் தாய் பெற்ற குமாரனாகிய தன் சகோதரன் பென்யமீனைக் கண்டு, நீங்கள் எனக்குச் சொன்ன உங்கள் இளைய சகோதரன் இவன்தானா என்று கேட்டு, மகனே, தேவன் உனக்குக் கிருபைசெய்யக்கடவர் என்றான்.

ஆதியாகமம் 43:30

யோசேப்பின் உள்ளம் தன் சகோதரனுக்காகப் பொங்கினபடியால், அவன் அழுகிறதற்கு இடம் தேடி, துரிதமாய் அறைக்குள்ளே போய், அங்கே அழுதான்.

ஆதியாகமம் 43:31

பின்பு, அவன் தன் முகத்தைக் கழுவி வெளியே வந்து, தன்னை அடக்கிக்கொண்டு, போஜனம் வையுங்கள் என்றான்.

ஆதியாகமம் 43:32

எகிப்தியர் எபிரெயரோடே சாப்பிடமாட்டார்கள்; அப்படிச் செய்வது எகிப்தியருக்கு அருவருப்பாயிருக்கும்; ஆகையால், அவனுக்குத் தனிப்படவும், அவர்களுக்குத் தனிப்படவும், அவனோடே சாப்பிடுகிற எகிப்தியருக்குத் தனிப்படவும் வைத்தார்கள்.

ஆதியாகமம் 43:33

அவனுக்கு முன்பாக, மூத்தவன் முதல் இளையவன்வரைக்கும் அவனவன் வயதின்படியே அவர்களை உட்காரவைத்தார்கள்; அதற்காக அவர்கள், ஒருவரை ஒருவர் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள்.

தேவ ஆவியை பெற்ற மனுஷர்கள் தனக்குள் எவ்வளவு வருத்தங்கள் வியாகுலங்கள் இருந்தாலும் அதை வெளியே காட்டி கொள்ள மாட்டார்கள் அவர்கள் தங்களை தானே திடப்படுத்தி கொண்டு மற்றவர்களுக்கு ஆசீர்வாத பாத்திரமாக இருப்பார்கள். எப்பொழுதும் நன்மை செய்கிறதிலே நோக்கமாய் இருப்பார்கள். நீங்கள் கர்த்தருக்காக எழும்பி பிரகாசிக்கும் பொழுது உங்களை பார்த்து பிரமித்து ஆச்சரியப்படுவார்கள். 

7. ஆறுதல் செய்கிறவர்களாக மாற்றுவார்

ஆதியாகமம் 48:11

இஸ்ரவேல் யோசேப்பை நோக்கி: உன் முகத்தைக் காண்பேன் என்று நான் நினைக்கவில்லை; ஆனாலும், இதோ, உன் சந்ததியையும் காணும்படி தேவன் எனக்கு அருள்செய்தார் என்றான்.

ஆதியாகமம் 47:8

பார்வோன் யாக்கோபை நோக்கி: உமக்கு வயது என்ன என்று கேட்டான்.

ஆதியாகமம் 47:9

அதற்கு யாக்கோபு: நான் பரதேசியாய்ச் சஞ்சரித்த நாட்கள் நூற்று முப்பது வருஷம்; என் ஆயுசுநாட்கள் கொஞ்சமும் சஞ்சலமுள்ளதுமாயிருக்கிறது; அவைகள் பரதேசிகளாய்ச் சஞ்சரித்த என் பிதாக்களுடைய ஆயுசுநாட்களுக்கு வந்து எட்டவில்லை என்று பார்வோனுடனே சொன்னான்.

ஆதியாகமம் 48:2

இதோ, உம்முடைய குமாரனாகிய யோசேப்பு உம்மிடத்தில் வந்திருக்கிறார் என்று யாக்கோபுக்கு அறிவிக்கப்பட்டது; அப்பொழுது இஸ்ரவேல் தன்னைத் திடப்படுத்திக்கொண்டு, கட்டிலின்மேல் உட்கார்ந்தான்.

ஆதியாகமம் 48:3

யாக்கோபு யோசேப்பை நோக்கி: சர்வவல்லமையுள்ள தேவன் கானான்தேசத்திலுள்ள லூஸ் என்னும் இடத்தில் எனக்குத் தரிசனமாகி, என்னை ஆசீர்வதித்து:

யோசேப்பு வந்து இருக்கிறார் என்று இஸ்ரவேலிடம் சொன்ன பொழுது அவர் தன்னை திடப்படுத்தி கொண்டு கட்டிலின் மீது உட்கார்ந்தார். கர்த்தர் உங்களை கர்த்தர் ஆறுதல் செய்கிறவர்களாக மாற்றுவார். உங்கள் முகத்தை பார்க்கும் பொழுது சமாதானம் ஏற்படும் படியாக கர்த்தர் மாற்றுவார். உங்களை பார்க்கும் பொழுது மற்றவர்களுக்கு தேவபக்தி உண்டாகும் படியாய் செய்வார். 


FOR CONTACT

Brother Micheal

Kanmalai Christian Church

Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment